திசை மாறுகிறது "தீபா" புயல்?

தமிழக அரசியலில் கடந்த டிசம்பர் மாதம் அடிக்க தொடங்கிய புயல் ஒரு புரட்டு புரட்டி அடித்து இப்போதுதான் சற்று ஓய்ந்திருக்கிறது என்றே சொல்ல வேண்டும்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணச் செய்தியில் தொடங்கி பல்வேறு காட்சிகள் தினமும் நம்மை விறுவிறுப்பாக கண்காணிக்க செய்தது. அடுத்து என்ன, அடுத்து என்ன என்று நாள்தோறும் நாடே உற்று நோக்கிக் கொண்டிருந்த வேளையில் தான் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, தமிழக அரசியலை புரட்டிப் போடப் போகும் இன்னொரு புயலாக கிளம்புவார் என்று பேசப்பட்டது.
ஜெயலலிதாவின் அபிமானிகள், ஆதரவாளர்கள் எல்லோம் அவரை இன்னொரு ஜெயலலிதாவாகவே பார்க்கத் தொடங்கினர். தினம் தோறும் அவர் வீட்டு முன் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் வந்து குவிந்ததோடு அவரை அரசியலுக்கு வருமாறும் அதிமுகவின் தலைமையை ஏற்கவேண்டும் என்றும் ஆரவார குரல் எழுப்பினர். அதுமட்டும் இன்றி மாநிலம் முழவதும் வரவேற்பு பதாகைகளும், தொண்டர்களின் ஆரவாரமும் நாளுக்கு நாள் அதிகரிக்கத் தொடங்கியது.
இந்நிலையில்தான் எதிர்பாராமல் வந்த ஜல்லிக்கட்டு தன்னெழுச்சிப் போராட்டம் தீபா புயலை முடக்கிப் போட்டது. என்றாலும் ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு பின் மீண்டும் மையம் கொள்ளத் தொடங்கிய தீபா புயல் மெல்ல தீவிரம் அடையும் நேரத்தில் அரசியலில் புதிய சூறாவளியாக புறப்பட்டதுதான் பன்னீர் செல்வத்தின் அதிரடி முடிவுகள்.
அதிமுகவில் சசிகலாவின் தலைமையை ஏற்க முடியாமல் திடீர் என ஞானோதயம் தோன்ற ஜெயலலிதாவின் நினைவிடத்தில் வந்து தியானம் செய்த அவர் அம்மாவின் ஆன்மா உந்தியதால் வெகுண்டு எழுந்ததாகவும் மனசாட்சியோடு ஒரு யுத்தம் நடத்தியப் பின் இறுதியில் இங்கு வந்து பேசுகிறேன் என்றும் செய்தியாளர்களுக்கு பேட்டிக் கொடுத்து தமிழகத்தின் கடைக்கோடி மனிதனையும் திரும்பிப் பார்க்க வைத்தார்.

இந்த அதிர்வலையில் செய்வது அறியாமல் சசிகலா அணியை விட அதிகம் திணறியது, தீபாவின் அரசியல் கனவுதான் என்று சொல்ல வேண்டும். வெவ்வேறு திசையில் புறப்பட்ட இரண்டு புயல் சின்னங்கள் ஒரே இடத்தில் மையம் கொள்வது போல தீபா, ஓ. பன்னீர் செல்வத்துடன் இணைந்து செயல்படுவது என்று முடிவெடுத்தார்.
இதில் அவரின் ஆதரவாளர்கள் பலருக்கும் அதிருப்திதான் என்றாலும் வேறு வழியிலாமல் அப்போதைய சூழலுக்கு அதை செய்ய வேண்டியதாகியது. அந்த முடிவுக்குப் பின் சசிகலாவின் சிறைவாசம், கூவத்தூரில் எம்.எல்.ஏக்கள் சிறைவைப்பு, போன்ற சம்பவங்கள் எல்லாம் தங்களுக்கு சாதகமாக மாறும் என்றே அவர்கள் எண்ணினர். ஆனால்  சசிகலா அணியை அவர்களால் வீழ்த்தக் கூடிய அளவுக்கு வலிமையையும் ஆதரவும் அவர்கள் தரப்பில் இல்லை என்பதால் சட்டப் பேரவை பெரும்பான்மை நிகழ்வில் சசிகலா அணியே வென்றது.
இதையடுத்து உண்மையான அதிமுக அணி நாங்கள் தான் என்று சொல்லிக் கொண்ட பன்னீர் செல்வம் அணி மீண்டும் தர்மம் வெல்லும் என்றே கூறி அமைதி காக்க தொடங்கினர். எம்எல்ஏக்கள் ஆதரவுடன் சசிகலா அணி நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றாலும் மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. சசிகலா ஆதரவு எம்எல்ஏக்கள் தொகுதிக்கே செல்லமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது என்பது வேறுகதை.
இதற்கிடையில் வரும் 24-ம் தேதி ஜெயலலிதாவின் பிறந்த நாள் அன்று தனது அரசியல் பிரவேசம் குறித்த முக்கிய முடிவை அறிவிக்கப் போவதாக ஏற்கனவே கூறியிருந்த தீபா, இபோது என்ன செய்வார், என்ன சொல்வார் என்ற எதிர்பார்ப்பு அவரது ஆதரவாளர்கள் மத்தியில் இருக்கிறது. ஆனாலும் தீபா புயலாய் புறப்பட்டு தமிழக அரசியலை புரட்டி போடுவார் என்று எதிர்பார்த்திருந்த தொண்டர்களுக்கு அந்த புயல் திசை திரும்பி இருக்கிறதோ, அல்லது வேகம் குறைந்து வலுவிழந்து விட்டதோ என்று எண்ணும் அளவுக்கு சூழல் மாறியிருக்கிறது என்பதான் உண்மை.

இதற்கிடையில், திமுக கையில் எடுத்துள்ள போராட்ட அலைகளுக்கு மத்தியில் தீபாவின் முடிவுகள் தமிழக அரசியலில் என்ன மாற்றத்தை கொண்டு வந்துவிட முடியும் என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. அதிகபட்சம் ஒரு  புதிய கட்சி ஒன்று உதயமாலாம். இந்த புதிய கட்சியில் தீபாவின் கரங்களுடன் ஓ பன்னீர் செல்வம் கரங்களும் இணைந்து செயல்படுமா அல்லது தீபா தனித்தே இயங்க போகிறாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
அது வெறும் கேள்விக் குறியோடு நின்று விடாமல் ஓ. பன்னீர் செல்வத்துக்கான கோரிக்கையாகவும் முன் வைக்கப்பட்டுள்ளது. "தமிழக மக்கள் உங்கள் பின்னால் வர வேண்டும் என்றால் தீபாவை கழக பொதுச் செயலாளராக, தமிழக முதல்வாரக நீங்கள் முன்மொழிய வேண்டும்" என்று தீபா அம்மா பேரவை சார்பாக வேண்டுகோள் வைக்கப்பட்டுள்ளது. "அப்படி செய்தால் மட்டுமே நாங்கள் உங்கள் பின்னால் வருகிறோம் இல்லை என்றால் நாங்கள் உங்களுக்கு ஆதரவு தர மாட்டோம்" என்று 32 மாவட்ட அம்மா தீபா பேரவை தொண்டர்கள் தெரிவித்துள்ளனர். 
எதுவாயினும் ஏற்கனவே 234 தொகுதிகளுக்கு 50க்கும் மேற்பட்ட கட்சிகள் இருக்கின்றன. அத்தோடு இதுவும் ஒன்னா? அல்லது ஒன்றாவது இடத்துக்கானதா..? என்பதை காலம் தான் சொல்ல வேண்டும்.
ஏற்கனவே காலம் கனியும் என்றுதான் திமுகவில். மு.க.ஸ்டாலின், தேமுதிகவில் விஜயகாந்த், பா.ம.கவில் அன்புமணி, நாம் தமிழர் கட்சியில் சீமான், தேசிய கட்சியான பாஜக, காங்கிரஸ் போன்றோரும் காத்திருக்கிறார்கள் எது எப்படி ஆனாலும் மக்கள் தீர்ப்புதானே மகசேன் தீர்ப்பு.

0 Comments: